கர்நாடகத்தில் கார்-அரசு பஸ் மோதி விபத்து: பெண்கள் உள்பட 5 பேர் நசுங்கி சாவு

கதக் அருகே காரும், அரசு பஸ்சும் மோதிக் கொண்ட விபத்தில் பெண்கள் உள்பட 5 பேர் நசுங்கி பலியான சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-10-16 18:45 GMT

கதக்:

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் கஜேந்திர கடா தாலுகா நரேகல் புறநகரில் உள்ள சாலையில் நேற்று காலை 9.30 மணிக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் ஒரு காரும் வந்தது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக அரசு பஸ்சும், அந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. பஸ் மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இதனால் காரில் இருந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் நரேகல் போலீசார் விரைந்து வந்து காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிய 4 பேரையும் நீண்ட நேரம் போராடி மீட்டனர். உடனடியாக அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதுபோல், பலியானவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா மாதனஹிப்பரகி கிராமத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன் கட்டே (வயது 31), சிவக்குமார், சந்திரகலா, ராணி மற்றும் தாட்சாயிணி என்று அடையாளம் காணப்பட்டது. படுகாயம் அடைந்தவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவார்கள். அவர்கள் 4 பேரில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆலந்தாவில் இருந்து 9 பேரும் காரில் கஜேந்திர கடாவுக்கு வந்து, அங்கிருந்து சிரஹட்டியில் இருக்கும் பக்கீஷ்வரா மடத்திற்கும், சில கோவில்களுக்கும் சென்ற போது விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நரேகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்