பெங்களூரு வாலிபர் கொலை வழக்கில் 8 பேர் கைது

பெங்களூரில் வாலிபர் கொலை வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-08-31 18:45 GMT

  மைசூரு

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா கோளூரு கிராமத்தில் புதரில் சாக்குப்பையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த உல்லஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நஞ்சன்கூடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து உல்லஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டவர் பெங்களூருவை சேர்ந்த நவீன் என்பது தெரியவந்தது. அவர் கடந்த 27-ந்தேதி மைசூரு அரண்மனைக்கு 2 இளம்பெண்களுடன் வந்துள்ளார்.

அப்போது அவர்களுடன் நவீன் வீடியோ எடுத்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு காரில் வந்த மர்மநபர்கள் நவீனை கடத்தி கோளூரு கிராமத்தில் ஏரி பகுதியில் கொலை செய்து சாக்குப்பையில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், நவீன் பெங்களூரு கக்கலிபுரா பகுதியை சேர்ந்த வினோத் என்பவரை கொலை செய்து சிறையில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு தான் அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்தநிலையில் பழிக்குப்பழியாக நவீன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து 8 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்