8-ம் வகுப்பு மாணவி மர்ம சாவு-போலீசார் தீவிர விசாரணை

அப்சல்புரா தாலுகாவில் 8-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்தாள். அவள் தூக்கில் பிணமாக தொங்கினாள்.

Update: 2023-07-23 18:45 GMT

கலபுரகி:-

8-ம் வகுப்பு மாணவி

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகா கொப்புரா(பி) கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன். இதில் மூத்த மகள் அஞ்சலி(வயது 14). இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் சிறுமியின் தந்தை ரமேஷ், தாய் சுனிதா ஆகியோர் ஆலந்தா தாலுகாவில் உள்ள கடலகி கிராமத்திற்கு புறப்பட்டனர்.

அப்போது மகள் அஞ்சலியை வீட்டில் விட்டுவிட்டு சென்றிருந்தனர். கடலகி கிராமத்திற்கு சென்ற அவர்கள் அங்கு தங்களது உறவினரை சந்தித்தனர்.

தூக்கில் பிணமாக தொங்கினாள்

நேற்று காலையில் அவர்கள் அங்கிருந்து வீடு திரும்பினர். அப்போது வீட்டில் அஞ்சலி தூக்கில் பிணமாக தொங்கினாள். அவளது உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன ரமேசும், சுனிதாவும் இதுபற்றி தேவலகானகாபுரா போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமி அஞ்சலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மர்ம சாவு

சிறுமியின் சாவு மர்மமாக உள்ளது. இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே சிறுமி தற்கொலை செய்து கொண்டாளா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்டாளா? என்பது தெரியவரும் என்றும், இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்