துபாய் செல்வதற்கு அனுமதி கோரி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனு தாக்கல்

நடிகையின் மனு தொடர்பாக பதிலளிக்க அமலாக்கத்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது.

Update: 2023-01-25 09:09 GMT

புதுடெல்லி,

பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி முறைகேடு விவகாரத்தில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கில் கடந்த நவம்பர் 15-ந் தேதி அவருக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், துபாயில் வரும் 29-ந்தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால், வரும் 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை துபாய் செல்வதற்கு அனுமதி வழங்க ஜாக்குலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சைலேந்த மாலிக், 27-ந்தேதி வரை அமலாக்கத்துறைக்கு அவகாசம் வழங்கி, வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்