குண்டுவெடிப்பு சம்பவம்: அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது- கேரள டிஜிபி

குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை என கேரள டிஜிபி கூறியுள்ளார்.

Update: 2023-10-29 09:02 GMT

கோழிக்கோடு,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் இன்று காலை திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் கூறியுள்ளதாவது;

"கேரள மாநிலம் கொச்சியில் கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டத்தில் வெடித்தது குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு. ஐ.இ.டி. (Improvised Explosive Device) வகை வெடி பொருள் வெடித்திருக்கலாம்.

இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை. வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. குண்டுவெடிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாங்கள் முழுமையான விசாரணை நடத்தி வருகிறோம். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுப்போம்" இவ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்