பிரஜ்வல் பாஸ்போர்ட்டை ரத்து செய்க: பிரதமருக்கு சித்தராமையா 2வது முறையாக கடிதம்

பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2024-05-23 06:13 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாசன் நாடாளுமன்ற தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சியின் எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர், பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது. இதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பியோடினார். அந்த வழக்குகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவருக்கு 2 முறை லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துள்ள அதிகாரிகள், அவர் வைத்துள்ள டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா 2வது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், "கடுமையான குற்றங்களை செய்ததாக பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் எழுந்துள்ளது. மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரும், முன்னாள் பிரதமரின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா, தான் செய்த கொடூரமான குற்றங்கள் குறித்த செய்தி வெளியான சில மணி நேரங்களில் டிப்ளமேடிக் பாஸ்போர்ட் மூலம் நாட்டை விட்டு வெளியேறியது வெட்கக்கேடானது.

நாட்டை விட்டு வெளியேறவும், குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவும் அரசு வழங்கிய சலுகையை பிரஜ்வல் ரேவண்ணா துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் மற்றும் ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடப்பட்ட போதிலும் இன்றுவரை தலைமறைவாகவே இருந்து வருகிறார்.

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக பதியப்பட்டுள்ள எப்.ஐ.ஆர். ஆனது பாலியல் வன்கொடுமை, பாலியல் செயல்களை வலுக்கட்டாயமாக வீடியோ படம்பிடித்தது என பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தும் வகையிலான குற்றச்சாட்டுகளை கொண்டுள்ளது. எனவே, இந்த விஷயத்தை மிகவும் தீவிரத்துடன் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்து, பொதுமக்களின் நலன் கருதி அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்." என்று சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார்.

 

முன்னதாக, பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் அவரது டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்யக்கோரி முதல்-மந்திரி சித்தராமையா கடந்த 1ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்