இந்தூர் விவகாரத்தில் பிரதமர் மவுனம்: ராகுல் காந்தி விமர்சனம்
இந்தூரில் விநியோகிக்கப்பட்டது தண்ணீர் அல்ல, விஷம். ஆனால் அரசு நிர்வாகம் இந்த விவகாரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரம் என்று பாராட்டப்பட்ட மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாநகரில் குடிக்கும் குடிநீரே பொதுமக்களுக்கு விஷமாக மாறி உள்ளது. இந்தூர் பாகீரத்புராவில் குடிநீர் நஞ்சான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதாக இந்தூர் மேயர் புஷ்யமித்ரா பார்கவா கூறியிருந்தார். ஊடகங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் தகவலின் படி, 14 பேர் உயிரிழந்திருப்பார்கள் என தெரிகிறது. சுமார் 1,400-க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ( சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் 26-ல் உயிருக்கு ஆபத்தான பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தசம்பவம் மத்திய பிரதேசமாநிலத்தையே உலுக்கி உளளது. அலட்சியம் தொடர்பான புகார் காரணமாக ஒரு பொறியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் .இந்தூரில் இரண்டு உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தூரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் ஒரு பொதுக் கழிப்பறைக்கு அடியில் சென்ற குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டதில் குடிநீருடன் கழிவுநீர் கலந்துள்ளது. இந்த தண்ணீரை குடித்த பலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்தியாவின் தூய்மையான நகரமாக இந்தூர் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கு நடைபெற்ற இந்தச் சம்பவம் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தியது.
இது குறித்து மத்தியப் பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் கூறும்போது, இந்தப் பிரச்சினையில் இரண்டு, மூன்று நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 40,000-க்கு மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்றார். இதற்கிடையில், பாகீரத்புராவில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டு குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், ஒவ்வொரு முறையும் ஏழை மக்கள் இறக்கும்போது பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தூரில் குடிநீருக்கு மாறாக விஷமே விநியோகிக்கப்பட்டது. அதே சமயம் நிர்வாகம் கும்பகர்ணனைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறது.வீடுதோறும் துயரம் பரவியுள்ளது. ஏழைகள் நிர்கதியாக நிற்கின்றனர். இதற்கு எல்லாம் மேலாக பாஜக தலைவர்களிடம் இருந்து ஆணவமாக அறிக்கைகள் வருகின்றன.
அசுத்தமான துர்நற்றம் வீசும் தண்ணீரைப் பற்றி மீண்டும் மீண்டும் மக்கள் புகார் அளித்தனர். இருந்தும் ஏன் அரசு செவிசாய்க்கவில்லை. குடிநீரில் கழிவுநீர் கலந்தது எப்படி?சரியான நேரத்தில் நீர் விநியோகம் ஏன் நிறுத்தப்படவில்லை? பொறுப்பான அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும். இவை அனைத்திற்கும் யார் பொறுப்பு ஏற்பார்கள். சுத்தமான நீர் என்பது சலுகை அல்ல. அது வாழ்வதற்கான உரிமை. இந்த உரிமை கொலை செய்யப்பட்டதற்கு பாஜகவின் இரட்டை இன்ஜின் அரசும், அதன் அலட்சியமான நிர்வகம் மற்றும் அதன் இரக்கமற்ற தலைமை ஆகியவையே பொறுப்பு.
மத்திய பிரதேச மாநிலம் தற்போது மோசமான ஆட்சியின் மையமாக மாறியுள்ளது. ஓரிடத்தில் இருமல் மருந்து குடித்து ஏற்படும் மரணங்கள்.மற்றொரு இடத்தில் அரசு மருத்துவமனைகளில் எலிகளால் குழந்தைகளின் உயிர்கள் பறிக்கப்படுவது. இப்போது கழிவுநீர் கலந்த தண்ணீரை குடித்து ஏற்படும மரணங்கள். ஒவ்வொறு முறையும் ஏழை மக்கள் இறக்கும் போது பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.