முன்னாள் கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி மறைவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல்..!

முன்னாள் கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி மறைவிற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-18 07:50 GMT

பெங்களூரு,

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாகப் பதவி வகித்துள்ளார். கடந்த 1970 முதல் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 52 வருடங்களுக்கு மேலாக எம்.எல்.ஏவாக இருந்தார்.

சமீபத்தில் உம்மன் சாண்டிக்குத் தொண்டை புற்றுநோய் ஏற்பட்டது. இதற்காக சில மாதங்களுக்கு முன் ஜெர்மனிக்குச் சென்று சிகிச்சை பெற்றார். அதன்பின் பெங்களூருவில் சின்மயா மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். மாநில அரசின் அறிவுறுத்தலின்படி, நிபுணர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் உம்மன் சாண்டியின் (73) உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் உறுதி செய்யப்பட்டது. மரணம் குறித்து அவரது மகன் சாண்டி உம்மன் தகவல் தெரிவித்தார்.

முன்னாள் கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி மறைவிற்குப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உம்மன் சாண்டி கட்சிகள் கடந்து அனைவராலும் மதிக்கப்பட்டவர். காங்கிரஸ் கட்சிக்கும் கேரளாவுக்கும் ஆற்றிய சேவைக்காக அவர் எப்போதும் நினைவு கூரப்படுவார் என தன் வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்