ஜிஎஸ்டி இழப்பீடு தொகை: 21 மாநிலங்களுக்கு வழங்கியது மத்திய அரசு

தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு ரூ.86,912 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.

Update: 2022-05-31 17:53 GMT

Image Courtesy: PTI

புதுடெல்லி,

மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய அனைத்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையும் 2022ஆம் ஆண்டு மே 31 வரை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன்படி 2022 மே 31-ம் தேதி வரை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையான 86,912 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதில் தமிழகத்திற்கு ரூபாய் 9,602 கோடியும், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரள மாநிலத்திற்கு 5,693 கோடி ரூபாயும், ஆந்திர மாநிலத்திற்கு 3,199 கோடி ரூபாயும், கர்நாடக மாநிலத்திற்கு 8,633 கோடி ரூபாயும், புதுச்சேரிக்கு 576 கோடி ரூபாயும் மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்திற்கு 14,145 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இன்று விடுவிக்கப்பட்டுள்ள 86,912 கோடி ரூபாயில், 21,322 கோடி ரூபாய் கோடி ரூபாய் இந்த ஆண்டு (2022) பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான இழப்பீடு தொகை என்றும், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான இழப்பீடு தொகை 17,973 கோடி ரூபாய் மற்றும் 2022 ஜனவரி மாதத்திற்கு முன்பு வரை நிலுவையில் இருந்த 47,617 கோடி ரூபாய் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையின் மூலம் மாநிலங்கள் தங்கள் வளங்களை நிர்வகிக்கவும், நலத் திட்டங்களை செயல்படுத்தவும், மூலதனச் செலவுகள் செய்யவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்