எனக்கும், மோசடி வழக்கிற்கும் தொடர்பு இல்லை முன்னாள் மந்திரி சுனில்குமார் பேட்டி

எனக்கும், மோசடி வழக்கிற்கும் தொடர்பு இல்லை என முன்னாள் மந்திரி சுனில்குமார் கூறினார்.

Update: 2023-09-17 18:45 GMT

உடுப்பி-

எனக்கும், மோசடி வழக்கிற்கும் தொடர்பு இல்ைல என முன்னாள் மந்திரி சுனில்குமார் கூறினார்.

7 பேர் கைது

உடுப்பியை சேர்ந்தவர் கோவிந்தபாபு பூஜாரி. தொழில் அதிபர். இவரிடம் பா.ஜனதா சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பதாக கூறி ரூ. 5 கோடி மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக இந்து அமைப்பு பிரமுகர் சைத்ரா குந்தாப்புரா உள்பட 7 பேரை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த மோசடி விவகாரத்தில் விஜயநகர் மாவட்டம் காலு மடத்தின் மடாதிபதி அபினவ காலஸ்ரீ பெயரும் சேர்க்கப்பட்டது. இதில் தலைமறைவாக உள்ள மடாதிபதியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்தநிலையில் இந்த மோசடி வழக்கில் முன்னாள் மந்திரி சுனில் குமாருக்கும் தொடர்பு இருப்பதாகவும் சைத்ரா பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

4 முறை வெற்றி

இதுகுறித்து முன்னாள் மந்திரி சுனில்குமார் கூறுகையில், பா.ஜனதா கட்சி பெயரை கொண்டு யாரும் சீட் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றவில்லை. தற்போது கைது செய்யப்பட்ட நபர்கள் யாரென்று எனக்கு தெரியாது. நான் யாரிடமும் சமூகவலைதளங்களில் பேசுவதில்லை. பா.ஜனதா கட்சியில் பணம் கொடுத்து யாரும் சீட் வாங்குவதில்லை. அப்படி நான் பணம் கொடுத்து சீட் வாங்கி இருந்தால் 4 முறை வெற்றி பெற்றிருக்க முடியாது.

பணத்தை தவறான முறையில் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடி வழக்கில் தொடர்புடைய யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசடி சம்பவத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, இது தொடர்பாக எந்த விசாரணைக்கும் நான் தயார், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்