டெல்லியில் கடும் பனி; 228 விமானங்கள் ரத்து
5 விமானங்கள் அருகேயுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன.;
புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லியில் கடும் குளிர், பனி மற்றும் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதில், காலையிலேயே பனி படர்ந்து தெளிவற்ற வானிலையும் காணப்படுகிறது.
டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளிலும் பனிப்போர்வை போர்த்தியது போன்று உள்ளது. இதனால், வாகனங்கள் சாலையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்லும் நிலை காணப்படுகிறது. பல பகுதிகளிலும் காலையிலேயே பனி மூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.
டெல்லியில் பனி அடர்ந்த சூழலால், தெளிவற்ற வானிலை ஏற்பட்டு டெல்லி விமான நிலையத்தில், 131 விமானங்களின் புறப்பாடு மற்றும் 97 விமானங்களின் வருகை என மொத்தம் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களின் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இவற்றில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர, 5 விமானங்கள் அருகேயுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன என அதிகாரி ஒருவர் கூறினார்.