'உன் நலனுக்காக விரதம் இருப்பேன்' - நடிகைக்கு, சிறையில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் கடிதம்

உன் நலனுக்காக விரதம் இருப்பேன் என்று நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு, சிறையில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2023-10-17 01:47 GMT

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் சிக்கி பிரபலம் ஆனவர் சுகேஷ் சந்திரசேகர். பெங்களூருவைச் சேர்ந்த இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இதன்பிறகும் அவர் பல்வேறு நடிகைகளுடன் தொடர்பு வைத்ததாக தெரிகிறது. இதற்காக அவர் பல கோடிகளை செலவு செய்துள்ளார்.

இதில் அவருடன் நெருக்கமாக பேசப்பட்டவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர்கள் திருமணம் செய்ய இருந்த நேரத்தில்தான் சுகேஷ் சந்திரசேகர் மீது வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் அவரால் வெளியே வரமுடியவில்லை. டெல்லி மண்டோலி சிறையில் இருக்கிறார். சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தாலும் அடிக்கடி கடிதங்கள் எழுதி பரபரப்பாகி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது அவர் தன் காதலி ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு காதல் ரசம் சொட்ட சொட்ட கடிதம் எழுதி இருக்கிறார். இதுதான் தற்போது டெல்லியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜாக்குலின் பெர்னாண்டஸ் சமீபத்தில் தோகா கண்காட்சியில் தோன்றி அசத்தினார். இதை நினைவுபடுத்தி சுகேஷ் சந்திரசேகர் கடிதத்தை தொடங்கியிருக்கிறார். "பேபி, தோகா ஷோவில் நீ கவர்ச்சியாகவும், மிக அழகாகவும் இருந்தாய். என் பொம்மா…உன்னைவிட யாரும் அழகில்லை" என வழிந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஜாக்குலினுக்காக நவராத்திரி விரதம் இருக்கப்போவதாக தெரிவித்து உள்ளார். "உன் நல்வாழ்வுக்காக, நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றுவதற்காக 9 நாட்களும் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன். மாதாவின் சக்தியால் எல்லாமே நமக்கு சாதகமாக இருக்கும். உண்மை வெல்லும். நாம் விரைவில் ஒருவரோடு ஒருவராக இருப்போம். என்ன நேர்ந்தாலும் ஒன்றாகவே வாழ்வோம். என் பேபி…" என்று காதல் ரசத்தை கொட்டியிருக்கிறார். மேலும் நான் உன்னை நேசிப்பதை எந்த சிறையாலும் தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்