சிக்கமகளூருவில்கிரகலட்சுமி திட்டத்திற்கு 2½ லட்சம் பெண்கள் விண்ணப்பம்

சிக்கமகளூரு மாவட்டத்தில் கிரகலட்சுமி திட்டத்திற்கு 2½ லட்சம் பெண்கள் விண்ணப்பித்ததாக கலெக்டர் மீனா நாகராஜ் தகவல் தெரிவித்தார்.

Update: 2023-08-26 18:45 GMT

சிக்கமகளூரு :-

சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கா்நாடக அரசு அறிவித்துள்ள கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த தி்ட்டம் வருகிற 30-ந் தேதி மாநிலம் முழுவதும் தொடங்கப்பட இருக்கிறது. இதுகுறித்து சிக்கமகளூரு கலெக்டர் மீனா நாகராஜ் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

கிரக லட்சுமி திட்டம் வருகிற 30-ந் தேதி மாநிலம் முழுவதும் தொடங்க இருக்கிறது. அன்றைய தினம் மைசூருவில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி சிவக்குமார் கிரக லட்சுமி திட்டத்தை தொடக்கி வைக்கின்றனர். அதே நாளில் சிக்கமகளூருவில் எம்.எல்.ஏ.தம்மையா தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் மாவட்டத்தில் 35 நகரப்பகுதியிலும், 220 கிராமங்களிலும் தொடங்கப்படுகிறது. தகுதியானவர்களுக்கு இந்த உதவி தொகை கிைடக்கும்.

கிரக லட்சுமி திட்டத்திற்கு சிக்கமகளூரு மாவட்டத்தில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 629 பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்னும் 32 ஆயிரம் பேர் விண்ணப்பிக்கவில்லை. அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பித்தவர்களின் பட்டியல் படி சிக்கமகளூரு மாவட்டத்தில் ரூ.41 கோடியே 41 லட்சத்து 45 ஆயிரம் செலவாகும் என்று கூறப்படுகிறது.

இந்த பணம் விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். கிரகலட்சுமி திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள சிலர், ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய கால அவகாசம் கேட்டுள்ளனர். அதன்படி கூடுதல் கால அகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்