சிவமொக்காவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 36 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

சிவமொக்காவில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பதற்றமான பகுதிகளாக கருதி 36 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Update: 2022-08-29 15:24 GMT

சிவமொக்கா;

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் நாளை(புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எளிமையாக கொண்டாடப்பட்டது.

சிவமொக்காவிலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைைய கொண்டாட இந்து சமுதாய மக்களும், இந்து அமைப்பினர் உள்ளிட்டோரும் தயாராகி வருகின்றனர்.

இதற்கிடையே சுதந்திர தினத்தன்று சிவமொக்கா நகரில் வீரசாவர்க்கர் பேனர் அகற்றப்பட்டதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் சிவமொக்காவில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பலத்த போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிவமொக்கா நகரில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பதற்றமான பகுதிகளை கண்டறிந்து கண்காணிப்பு கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சிவமொக்கா மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

36 இடங்களில் கேமராக்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பதற்றமான பகுதிகளாக கருதி 36 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் 50 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று சில சிலைகள் விஜர்சனம் செய்ய உள்ளதால் துங்கா ஆறு, பாசன கால்வாய்களில் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் வரை சிவமொக்கா நகரில் 350 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாதவாறு கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்