உடுப்பியில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை

உடுப்பியில் வெவ்வேறு சம்பவங்களில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-07-28 18:45 GMT

உடுப்பி-

உடுப்பி மாவட்டம் ஹெப்ரி தாலுகா ஷிவ்பூரை சேர்ந்தவர் ரங்கநாத் ஷெட்டி (வயது33). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். ரங்கநாத் ஹெப்ரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவர் மனநலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ரங்கநாத் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஹெப்ரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரங்கநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதேப்போல், ஹெப்ரி தாலுகா குக்குஜே கிராமத்தை சேர்ந்தவர் கொரகப்பா பூஜாரி (49). இவரது மனைவி கவிதா.கொரகப்பா குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். அங்கு அவர் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குக்குஜே கிராமத்திற்கு கொரகப்பா வந்தார். இதையடுத்து அவர் தொண்டரங்காடியில் உள்ள மனைவியின் சகோதரர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்குள்ள கிணற்றில் கொரகப்பா குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அஜேக்கரு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொரகப்பாவிற்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவங்கள் குறித்து ஹெப்ரி, அஜேக்கரு போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்