மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சத்யேந்திர ஜெயின் - நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் கெஜ்ரிவால்
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சத்யேந்திர ஜெயினை நேரில் சென்று சந்தித்தார்.
புதுடெல்லி,
டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியில் சுகாதார துறை மந்திரியாக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இதுதவிர உள்துறை, மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட இலாகாக்களையும் கவனித்து வந்து உள்ளார்.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு மே 30-ந்தேதி, பணமோசடி தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் அமலாக்க இயக்குநரகம் அவரை கைது செய்தது. இந்த வழக்கில் திகார் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்த சத்யேந்திர ஜெயினுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முன்னதாக அவர் தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர், அவரை லோக்நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரைக்கப்பட்டது. மருத்துவ காரணங்களுக்காக சுப்ரீம் கோர்ட்டு சத்யேந்திர ஜெயினுக்கு ஜூலை 11-ந்தேதி வரை இடைக்கால் ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சத்யேந்திர ஜெயினை நேரில் சென்று சந்தித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சத்யேந்திர ஜெயினிடம் அவரது உடல்நலம் குறித்து கெஜ்ரிவால் விசாரித்தார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கெஜ்ரிவால், 'ஒரு துணிச்சலான மனிதரை, ஒரு கதாநாயகனை சந்தித்தேன்' என்று பதிவிட்டுள்ளார்.