மத்திய அரசை கண்டித்து கேரள முதல் மந்திரி டெல்லியில் இன்று போராட்டம்

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்கள் வரிந்து கட்டுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Update: 2024-02-08 02:49 GMT

புதுடெல்லி,

மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் கடந்த 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த  பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. நிதி ஒதுக்கீடு செய்வதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக  தென் மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. 

கர்நாடகத்திற்கு அநீதி இழைத்துள்ளதாக மத்திய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் அரசு ,டெல்லி ஜந்தர் மந்தரில் பிப்ரவரி 7-ந்தேதி (நேற்று) போராட்டம் நடத்தியது. முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், தினேஷ் குண்டுராவ், கே.எச்.முனியப்பா, எச்.கே.பட்டீல், ராமலிங்கரெட்டி, எச்.சி.மகாதேவப்பா உள்பட மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அவர்கள் மத்திய அரசை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தங்களின் கைகளில் ஏந்தியிருந்தனர்.

இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இன்று கேரளா எம்.பிக்கள் போராட்டம் நடத்த உள்ளனர். இப்போராட்டத்துக்கு தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க ஆதரவு தெரிவித்துள்ளது. இப்போராட்டத்தில் தி.மு.க. எம்பிக்கள் கறுப்பு உடை அணிந்து பங்கேற்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்