பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

ஜெர்மனியில் தலைமறைவாக உள்ள ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

Update: 2024-05-02 08:51 GMT

கர்நாடகா அரசியலில் ஹாசன் தொகுதி எம்.பியும், தற்போதைய ஜேடிஎஸ் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மீது எழுந்துள்ள பாலியல் சித்ரவதை தொடர்பான புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

300-க்கும் மேற்பட்ட பெண்கள், அரசு அதிகாரிகளை மிரட்டி பிரஜ்வல் ரேவண்ணா பலாத்காரம் செய்து அதை 2,976 ஆபாச வீடியோக்களாக எடுத்து பென் டிரைவ்வில் வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. அத்துடன் பிரஜ்வல் ரேவண்ணாவுடன் பல பெண்கள் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களும் அடுத்தடுத்து வெளியானதால், அவர் மீதும் அவரது தந்தை ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில, தனது பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பெங்களூருவில் இருந்து இரவோடு இரவாக ஜெர்மனிக்கு பிரஜ்வல் ரேவண்ணா தப்பிச் சென்றார்.

பாலியல் முறைகேடு குறித்து விசாரிக்க எஸ்ஐடி அமைக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் தலைமறைவானார். பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும், தப்பியோடிய எம்.பி.யை மத்திய அரசு அலுவலகங்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு அழைத்து வருவதை உறுதி செய்யவும் தலையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், விசாரணைக்கு தேவையான போது பிரஜ்வல் இந்தியா திரும்புவார் என்று அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கூறினார். இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவை எஸ்ஐடி குழு விசாரிக்க வேண்டியதுள்ளது. இதன் காரணமாக ஜெர்மனியில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலை இந்தியா அழைத்து வரவேண்டும். இதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் கர்நாடகா அரசு சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன் மூலம் பிரஜ்வல் ரேவண்ணா ஆஜரானவுடன், அவரை காவலில் எடுத்து விசாரிக்க எஸ்ஐடி தயாராகி வருகிறது. இதனிடையே, சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு 7 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று பிரஜ்வல் ரேவண்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும் செய்திகள்