கிறிஸ்தவ தேவாலயத்தில் பொருட்கள் சூறை-வாலிபர் கைது

கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் புகுந்து பொருட்கள் சூறையாடினார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-06-21 18:45 GMT

கம்மனஹள்ளி:-

பொருட்கள் சேதம்

பெங்களூரு கம்மனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் மேத்தீவ் (வயது 29). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கேரளாவை சேர்ந்த இவர் பெங்களூருவுக்கு வேலைக்காக குடும்பத்துடன் வந்தார். ஆனால் அவருக்கு வேலை ஏதும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த நாட்களில் மனஉளைச்சலுடன் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சுமார் 4 மணி அளவில் அவர் அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றார். உள்ளே சென்ற அவர், திடீரென அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தினார். அங்கிருந்த கண்ணாடி பொருட்கள், அழகு

பூஞ்செடிகள் ஆகியவற்றை தரையில் வீசி எறிந்து உடைத்தார். அப்போது தேவாலயத்தில் பணியில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுடன், மேத்தீவ் வாக்குவாதம் செய்துள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்

இதற்கிடையே அவர்கள் பானசாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் மேத்தீவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முறையாக பதில் அளிக்காமல் இருந்தார். மேலும் தான் ஒரு கடவுள் எனவும், தனது தந்தை அப்படி தான் கூறியதாகவும் கூறினார். இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு மேத்தீவின் தாய் வந்தார்.

அவர் கூறுகையில் தனது மகனுக்கு கடந்த சில வாரங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறினார். இதையடுத்து போலீசார் இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மேத்தீவை மருத்துவ பரிசோதனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்