பிப்ரவரி 1-ந்தேதி வரை ராக்கி சாவந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் - போலீசாருக்கு, மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

பிப்ரவரி 1-ந்தேதி வரை நடிகை ராக்கி சாவந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று போலீசாருக்கு, மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-01-25 02:16 GMT

கோப்புப்படம்

மும்பை,

இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் மீது மற்றொரு நடிகையும், மாடல் அழகியுமான ஷெர்லின் சோப்ரா என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பை அம்போலி போலீசில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், தனது ஆபாச படங்களை நடிகை ராக்கி சாவந்த் சமூகவலைதளங்களில் பரப்பியதாக கூறியிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக போலீசார் பாலியல் துன்புறுத்தல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ராக்கி சாவந்த் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக முன்ஜாமீன் கேட்டு ராக்கி சாவந்த் தரப்பில் செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனு நேற்று முன்தினம் நீதிபதி கார்னிக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை ராக்கி சாவந்த் தரப்பில் ஆஜரான வக்கீல், நடிகை போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். வழக்கை கோர்ட்டு நேற்றைக்கு ஒத்திவைத்தது. அதுவரை நடிகை மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை ராக்கி சாவந்த் மீது வருகிற பிப்ரவரி 1-ந்தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று போலீசாருக்கு மும்பை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்