ட்ரோன்கள் மூலம் பார்சல் டெலிவரி - இந்திய அஞ்சல் துறை புதிய முயற்சி

ட்ரோன்கள் மூலம் பார்சல்களை அனுப்பும் சோதனை முயற்சியை இந்திய அஞ்சல் துறை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

Update: 2022-05-29 23:37 GMT

காந்திநகர்,

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நகரங்கள், கிராமங்கள், மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகள் என எல்லா இடங்களிலும் இந்திய அஞ்சல் துறை தனது சேவையை வழங்கி வருகிறது. இதில் அடுத்தகட்டமாக ட்ரோன்கள் மூலமாக பார்சல்களை அனுப்பும் சோதனை முயற்சியை இந்திய அஞ்சல் துறை மேற்கொண்டுள்ளது.

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி குஜராத் மாநிலத்தின் புஜ் தாலுகாவில் உள்ள ஹபே கிராமத்தில் இருந்து, கட்ச் மாவட்டத்தில் உள்ள நேர் கிராமத்திற்கு ட்ரோன் மூலம் பார்சல்கள் அனுப்பப்பட்டு உள்ளது.

சுமார் 46 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 25 நிமிடங்களில் கடந்த ட்ரோன், பார்சலை வெற்றிகரமாக டெலிவரி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் வரும் நாட்களில் ட்ரோன் மூலம் டெலிவரி செய்யும் பணியை இந்திய அஞ்சல் துறை முன்னெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



Tags:    

மேலும் செய்திகள்