மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி நியமனம்

மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுதா மூர்த்தி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-03-08 09:58 GMT

புதுடெல்லி,

மாநிலங்களவையில் கட்சிகளின் பலம் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களை தவிர மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டோ அல்லது ஜனாதிபதியால் நேரடியாகவோ மாநிலங்களவைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படலாம். இலக்கியம், கலை, அறிவியல், சமூக சேவை ஆகியவற்றில் சிறப்பு பங்களிப்பை வழங்கியவர்களுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாருமான சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சுதா மூர்த்திக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் புகைப்படத்துடன் வெளியிட்டிருக்கும் பதிவில், "இந்திய ஜனாதிபதி, சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராகப் பரிந்துரைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நாட்டின், சமூகப் பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா மூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது மற்றும் மற்ற மகளிருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. மாநிலங்களவையில் அவரது வரவு, நமது 'மகளிர் சக்தி'க்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும்.

இது நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் திறனை எடுத்துக்காட்டுகிறது. அவரது நாடாளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்