கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 6,338 கனஅடி தண்ணீர் திறப்பு

காவிரியில் இருந்து தொடர்ந்து 6-வது நாளாக தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-09-24 23:08 GMT

கோப்புப்படம் 

மண்டியா,

கா்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் நேற்று காலை நிலவரப்படி 96.80 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6,156 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 3,838 கனஅடியும், கால்வாய்களில் வினாடிக்கு 3,036 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று 2,274.70 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3,061 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 2,500 கனஅடியும், கால்வாய்களில் வினாடிக்கு 2,390 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.

இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 6,338 கனஅடி தண்ணீர் காவிரியில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது. தொடர்ந்து 6-வது நாளாக தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்