கேரளாவில் 'அவதார்-2' வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது என தகவல்
கேரளாவில் அவதார்-2 திரைப்படம் வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.;
Image Courtesy : @Avatar2Official twitter
https://www.dailythanthi.com/News/India/issues-araises-in-the-release-of-the-avatar-2-in-kerala-847362
திருவனந்தபுரம்,
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள 'அவதார்-2 தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் வரும் டிசம்பர் 16-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தியாவில் இந்த படத்திற்கான திரையரங்க முன்பதிவு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் அவதார்-2 திரைப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. கேரள மாநில திரையரங்க உரிமையாளர்களின் கூட்டமைப்பு (FEUOK) சார்பில், கேரளாவில் அவதார்-2 படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
அவதார்-2 படத்தின் முதல் 3 வார கலெக்ஷன்களில் இருந்து ஒவ்வொரு வாரமும் 60 சதவீதத்தை வழங்க வேண்டும் விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதித்தனர். ஆனால் கேரளாவில் வேற்று மொழி படங்களின் கலெக்ஷனில் 50 சதவீதம் மட்டுமே விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், அதற்கு மேல் வழங்கினால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பு கூறியது.
இந்த விவகாரத்தால், கேரளாவில் அவதார்-2 திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவானது. இந்த நிலையில், இவ்விவகாரத்தில் இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக திரையரங்க உரிமையாளர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் கேரளாவில் அவதார்-2 திரைப்படம் வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.