உப்பள்ளியில் வியாபாரி வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் திருட்டு

உப்பள்ளியில் வியாபாரி வீட்டில் ரூ.4 லட்சம் நகைகளை மர்மநபர்கள் திருடிசென்றனர்.

Update: 2023-08-30 18:45 GMT

உப்பள்ளி-

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா எபசூரு கிராமத்தை சேர்ந்தவர் கிரண்கவுடா பட்டீல். வியாபாரி. நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.

இதனை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து தங்கநகைகளை திருடி சென்றனர். நேற்று காலை கிரண்கவுடா பட்டீல் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது.

இதை பார்த்த கிரண்கவுடா பட்டீல் உப்பள்ளி புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. இதையடுத்து போலீசார் திருட்டு குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரூ.3.95 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்