பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 9 லட்சம் மோசடி

மங்களூருவில் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 9 லட்சத்தை மர்மநபர்கள் மோசடி செய்துள்ளனர்.

Update: 2023-09-17 18:45 GMT

மங்களூரு-

மங்களூருவில் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 9 லட்சத்தை மர்மநபர்கள் மோசடி செய்துள்ளனர்.

தனியார் நிறுவன ஊழியர்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் ஜெப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணி மங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சுப்பிரமணி செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், வீட்டில் இருந்தே ஆன்லைனில் பகுதி நேர வேைல பார்க்கலாம் என இருந்தது. உடனே அவர் அந்த லிங்ர்கில் சென்றார்.

பின்னர் அதில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் சுப்பிரமணி பதிவு செய்தார். இதையடுத்து சுப்பிரமணி எண்ணிற்கு மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அதில், பகுதி நேர வேலைக்கு முன்பணம் செலுத்த வேண்டும் என கூறினார். இதனை நம்பிய சுப்பிரமணி மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ. 10 ஆயிரம் அனுப்பி வைத்தார்.

வங்கி கணக்கிற்கு

மீண்டும் அவரை தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் முன்பணம் போதாது என கூறினார். இதையடுத்து பல்வேறு தவணைகளாக மர்மநபரின் வங்கி கணக்கிற்கு ரூ. 9 லட்சத்து 26 ஆயிரம் வரை செலுத்தினார். சில நாட்கள் ஆகியும் மர்மநபர் கூறியபடி சுப்பிரமணிக்கு பகுதி நேர வேலை வாங்கி கொடுக்கவில்லை.

இதையடுத்து, அவர் மர்மநபரை தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் எண் சுவிட்ச்-ஆப் என வந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை சுப்பிரமணி உணர்ந்தார். இதுகுறித்து அவர் மங்களூரு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்