பள்ளி பேருந்து - டிராக்டர் மோதி விபத்து: மாணவர்கள் 4 பேர் பலியான சோகம்

பள்ளி ஆண்டு விழா முடிந்து வீடு திரும்பும்போது ஏற்பட்ட இந்த விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பாகல்கோட் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-01-29 04:16 GMT

பெங்களூர்,

கர்நாடகா மாநிலம், பாகல்கோட் மாவட்டம் ஜமகண்டி தாலுகாவில் உள்ள அழகூர் கிராமத்தில் வர்தமான மகாவீர தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழா முடிந்து மாணவர்கள் பள்ளி பேருந்தில் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்த பேருந்து அழகூரில் இருந்து கவுடகி கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வேகமாக வந்த டிராக்டர் தனியார் பள்ளி பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தில் இருந்த மாணவர்கள் படுகாயமடைந்தனர். டிராக்டர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவர் பலியானார். இதையடுத்து அப்பகுதி மக்கள் காயமடைந்த மாணவர்களை ஜமகண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த பாகல்கோட் எஸ்.பி அமர்நாத் ரெட்டி, ஜமகண்டி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். விசாரணையில், ஸ்வேதா பாட்டீல் (11), கோவிந்த சதாசிவ ஜம்பகி (11), பசவராஜா சதாசிவ கோடகி (15), சாகர் குருலிங்க கடகோலா (16) ஆகிய 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் படுகாயமடைந்த எட்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்