வங்காளதேச எல்லையில் ரூ.14 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - ஒருவர் கைது
வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டுவரப்பட்ட தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
Image Courtesy : ANI
பாராசட்,
மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், வங்காளதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு இந்திய எல்லை காவல் ப டையை சேர்ந்த வீரர்கள் ரோந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை மறித்து சோதனை செய்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் 23 கிலோ தங்க கட்டிகள் இருந்ததால் அவரை பக்டா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். தங்க கட்டிகள் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டுவரப்பட்டது விசாரணையில் தெரியவந்ததால் அவற்றை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.14 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவரை கைது செய்ததுடன், வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருகிறது.