ஓ.பி.சி. சான்றிதழ்கள் ரத்து: ஐகோர்ட்டு தீர்ப்புக்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு

ஓ.பி.சி. சான்றிதழ்கள் ரத்து செய்த தீர்ப்பை ஏற்க மாட்டேன் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-23 07:51 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலத்தில் 37 பிரிவினருக்கு கடந்த 2010ம் ஆண்டுக்கு பின்னர் வழங்கப்பட்ட ஓ.பி.சி. சான்றிதழ்களை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

மேலும், 1993ம் ஆண்டு சட்டத்தின்படி ஓ.பி.சி. புதிய பட்டியலை தயாரிக்குமாறு மேற்கு வங்காள மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு காரணமாக அம்மாநிலத்தில் 5 லட்சம் ஓ.பி.சி. சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தீர்ப்பை ஏற்க மாட்டோம் என கூறியுள்ள அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஓ.பி.சி. இடஒதுக்கீடு தொடரும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், "கோர்ட்டில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் அல்ல. நான் நீதித்துறையை மதிக்கிறேன். ஆனால் இந்த உத்தரவை பிறப்பித்தவரின் தீர்ப்பை நான் ஏற்கவில்லை; அதை ஏற்க மாட்டேன். ஓ.பி.சி. இட ஒதுக்கீடு தொடரும். தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டை நாடுவேன். அவர்களுக்கு என்னை தெரியாது. நான் அவர்களின் விருப்பத்துக்கு தலைவணங்குபவள் அல்ல.

சட்டப்படி ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை அமல்படுத்தினோம். நாங்கள் ஆய்வுகளை நடத்தினோம். பல அறிக்கைகளை சமர்ப்பித்த குழுவின் தலைவராக உபென் பிஸ்வாஸ் இருந்தார். அப்போதும் கூட, இந்த விஷயத்தில் கோர்ட்டில் வழக்குகள் இருந்தன, ஆனால் மேல்முறையீடு செய்தவர்கள் அந்த வழக்குகளில் தோல்வியடைந்தனர்" என்று பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்