இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Update: 2022-05-27 04:50 GMT

புதுடெல்லி,

உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. மொத்தம் 9 தொடர்களாக நடந்த இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தாவும் பங்கேற்றார். இதில் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற கால் இறுதி சுற்றில், பிரக்ஞானநந்தா 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் வெய் யி என்பவரை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து அரையிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை எதிர்கொண்டார். இந்த சுற்றில் 2-2 என்ற கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்த நிலையில், வெற்றியை தீர்மானிக்க பிளே ஆஃப் ஆட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, டை பிரேக்கரில் 1.5 - 0.5 என்ற புள்ளிக்கணக்கில் அனிஷ் கிரியை வீழ்த்தி, பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

அதே சமயம் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர்-1 வீரர் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதிய சீனா வீரர் டிங் லிரன் வெற்றி பெற்றார். இதனையடுத்து செஸ்ஸபிள் மாஸ்டர் இறுதி போட்டியில் சீன வீரர் டிங் லிரன் உடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா விளையாடினார். இந்த போட்டி 1-1 என்ற செட் கணக்கில் போட்டி சமன் அடைந்தது. இறுதியில் டை பிரேக்கரில் சீன வீரர் திங் லிரன் வெற்றி பெற்றார். இதையடுத்து பிரக்ஞானந்தா 2-வது இடம் பெற்றார்.

இந்த நிலையில் உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2வது இடம் பிடித்த இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இப்போது 16 வயதாகும் பிரக்ஞானந்தா பணிக்கால அடிப்படையில் தனது 18 வது வயதில் பணியில் சேர்வார் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்