பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கைது செய்யப்பட்ட யூ டியூப் பிரபலம்

பிரபல யூ டியூபர் கவுரவ் தனேஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரசிகர்கள் குவிந்து நெருக்கடி ஏற்பட்ட நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Update: 2022-07-10 02:55 GMT



நொய்டா,



உத்தர பிரதேச மெட்ரோ ரெயில் நிலையத்தில் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும் என பிரபல யூ டியூபர் கவுரவ் தனேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இதில், தனது ரசிகர்களும் கலந்து கொள்வார்கள் என அவர் பதிவிட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மெட்ரோ ரெயில் நிலையத்தின் பிரிவு 51ல் குவிந்து விட்டனர். இதனால், கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தள்ளி கொண்டு முன்னே செல்லும் நிலை ஏற்பட்டது.

ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கும் இதனால் இடையூறு ஏற்பட்டது. குவிந்திருந்த ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் மெட்ரோ ரெயில்வே நிர்வாகனத்தினரும் திணறி போனார்கள். மெட்ரோ ரெயில் நிலையத்தின் கீழ் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் சாலையில் தேங்கி நின்ற வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அதிக நெருக்கடி ஏற்பட்ட சூழலில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக உடனடியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னர், தடையுத்தரவை மீறி செயல்பட்டதற்காக தனேஜாவை போலீசார் காவலுக்கு கொண்டு சென்றனர். இரண்டு மணிநேரம் போலீசாரின் காவலில் இருந்த அவர் பின்னர் கைது செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்