பெண்ணை கொலை செய்து உடலை ஆம்புலன்சில் கடத்தி சென்ற வாலிபரால் பரபரப்பு

பெண்ணை கொலை செய்து உடலை ஆம்புலன்சில் வைத்து கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-25 07:00 GMT

அம்பர்நாத்,

பெண்ணை கொலை செய்து உடலை ஆம்புலன்சில் வைத்து கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆம்புலன்சில் கடத்தல்

கல்யாணை சேர்ந்தவர் சதாம் சையத் (வயது30). இவர் கவிதா (24) என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் குடித்தனம் நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி அதிகாலை 4 மணி அளவில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கவிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்னர் உடலை மறைக்க அங்கிருந்த ஆம்புலன்சில் போட்டு கடத்தி சென்று உள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். மேலும் ஆம்புலன்சை பிடிக்க தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசில் சிக்கினார்

இதில் சதாம் சையத் புனே அருகே விஜாப்பூர் நோக்கி செல்வதாக தகவல் கிடைத்தது. உடனே புனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் புனே போலீசார் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அங்கு வந்த ஆம்புலன்சை வழிமறித்தனர்.

அதில் இருந்த கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணை கொலை செய்த சதாம் சையத்தை கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்