பாராலிம்பிக் பேட்மிண்டன்: வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார் தருண் தில்லான்

பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் தருண் தில்லான் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் தோல்வி அடைந்தார்.

Update: 2021-09-05 03:16 GMT
டோக்கியோ, 

டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் பாரா பேட்மிண்டன் எஸ்.எல் 4 பிரிவில் இந்தியாவின் தருண் தில்லான் வெண்கலப்பதக்க போட்டியில் விளையாடினார். முன்னதாக நேற்று நடைபெற்ற ஆடவர் எஸ்.எல் 4 பிரிவு பாரா பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து தருண் தில்லான் வெண்கலப் பதக்க போட்டிக்கு முன்னேறியிருந்தார். 

இந்நிலையில் இன்று நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான போட்டியில்  உலக தரவரிசையில் 5ஆம் வீரரான இந்தோனேஷியாவின் பிரடியை எதிர்த்து தருண் தில்லான் விளையாடினார். அதில் 15 நிமிடங்கள் நடைபெற்ற முதல் சுற்றை 21-17 என்ற கணக்கில் இந்தோனேஷிய வீரர் பிரடி வென்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றிலும் பிரடி 21-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வெற்றிபெற்றார். 

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தருண் தில்லான் தவறவிட்டார். உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீரரான தருண் ஏற்கெனவே குரூப் பிரிவு போட்டியில் பிரடியிடம் தோல்வி அடைந்திருந்தார். அதேபோல் தற்போது வெண்கலப் பதக்க போட்டியிலும் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார். 

மேலும் செய்திகள்