2019-20-ஆம் நிதி ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க நடவடிக்கை மத்திய அரசு அதிகாரி தகவல்

எதிர்வரும் 2019-20-ஆம் நிதி ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

Update: 2019-01-10 11:25 GMT
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

தொடர் இழப்பு

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா தொடர் இழப்பு கண்டு வந்த நிலையில் நலிவடைந்து இருக்கிறது. ஏராளமான கடன் சுமையும் உள்ளது. எனவே நிர்வாக உரிமையை கைவிடும் வகையில் இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன் 76 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் அந்த நிறுவனத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதில், லாபம் ஈட்டி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் இந்தியா-சிங்கப்பூர் சாட்ஸ் கூட்டு நிறுவனமான ‘அய்சாட்ஸ்’ பங்குகள் விற்பனையும் அடங்கும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச அளவில் மார்ச் 28-ந் தேதி ஏர் இந்தியாவை வாங்கத் தகுதியான தனியார் நிறுவனங்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் கோரப்பட்டது. விருப்ப மனுக்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 2018 மே 14 என்று மத்திய அரசு அப்போது கூறி இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இல்லாத நிலையில் விருப்ப மனுக்களை மே மாதம் 31-ந் தேதி வரை அனுப்பலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.

அப்போதும் தனியார் இதில் ஆர்வம் காட்டவில்லை. அதன் பிறகு 24 சதவீத பங்குகள் இந்திய அரசிடம் இருப்பதை சர்வதேச முதலீட்டாளர்கள் விரும்பவில்லை என தெரிய வந்தது. ஆக, இந்த ஒரு அம்சம் தடைக்கல்லாக இருந்ததால் மொத்த பங்குகளையும் (100 சதவீதம்) விற்று விட மத்திய அரசு முடிவு செய்தது.

பின்னர் அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது. அடுத்து அந்த நிறுவனத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை ஒத்திவைக்கவும், அதன் நடைமுறை மூலதன தேவைகளுக்காக போதிய அளவு நிதி உதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. எனினும் ஏ.ஏ.எஸ்.எல்., எச்.சி.ஐ., ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் மற்றும் ஏர் இந்தியா இன்ஜினீயரிங் சர்வீஸ் ஆகிய ஏர் இந்தியாவின் 4 துணை நிறுவனங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

100 கோடி டாலர்

இந்நிலையில், அடுத்த நிதி ஆண்டில் (2019-20) ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கை தொடங்கும் என்றும், அதன் மூலம் 100 கோடி டாலர் (சுமார் ரூ.7,000 கோடி) வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்