பிப்ரவரியில், பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 8.22 லட்சம் உயர்வு

கடந்த பிப்ரவரி மாதத்தில் இத்துறையினர் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.23.16 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. ஐனவரியுடன் ஒப்பிடும்போது இது 0.89 சதவீதம் குறைவாகும். நிதிச்சந்தை மற்றும் வருவாய் திட்டங்களில் அதிக அளவில் முதலீடுகள் வெளியேறியதே இதற்குக் காரணமாகும்...

Update: 2019-03-14 15:27 GMT
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

பரஸ்பர நிதி திட்டங் களில், பிப்ரவரி மாதத்தில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 8.22 லட்சம் உயர்ந்து இருக் கிறது.

நிர்வகிக்கும் சொத்து

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி நிறுவனங் கள் நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

பரஸ்பர நிதி துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் இத்துறையின் சொத்து மதிப்பு குறைகிறது.

ரூ.23.16 லட்சம் கோடி

கடந்த பிப்ரவரி மாதத்தில் இத்துறையினர் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.23.16 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. ஐனவரியுடன் ஒப்பிடும்போது இது 0.89 சதவீதம் குறைவாகும். நிதிச்சந்தை மற்றும் வருவாய் திட்டங்களில் அதிக அளவில் முதலீடுகள் வெளியேறியதே இதற்குக் காரணமாகும்.

2015-16-ஆம் நிதி ஆண்டில் பரஸ்பர நிதி துறையில் முதலீட்டாளர் கணக்குகள் 59 லட்சம் உயர்ந்தது. 2016-17-ஆம் ஆண்டில் 67 லட்சம் அதிகரித்தது. 2017-18-ஆம் நிதி ஆண்டில் இத்துறையின் அனைத்து திட்டங்களிலும் ஒட்டுமொத்த அளவில் 1.6 கோடி புதிய முதலீட்டாளர் கணக்குகள் தொடங்கப்பட்டது. இதனையடுத்து முதலீட்டாளர்கள் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 7.13 கோடியை தாண்டி இருந்தது.

பிப்ரவரி மாதத்தில்...

கடந்த பிப்ரவரி மாதத்தில் பரஸ்பர நிதி துறையில் முதலீட்டாளர் கணக்குகள் 8.22 லட்சம் உயர்ந்துள்ளது. பங்குசார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் (சேமிப்பு மற்றும் சமச்சீர் திட்டங்கள் உள்பட) 5.39 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டதே இதற்கு காரணமாகும். இந்த திட்டங்களில் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 6.87 கோடியை எட்டி உள்ளது. இதனையடுத்து இத்துறையில் முதலீட்டாளர் கணக்குகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8.18 கோடியாக அதிகரித்து இருக் கிறது.

சீரான முதலீட்டு திட்டங்கள்

எனினும், பரஸ்பர நிதி துறையில் அண்மைக் காலத்தில் எஸ்.ஐ.பி. எனப்படும் சீரான முதலீட்டு திட்டங் களில் முதலீட்டாளர் கணக்குகளின் வளர்ச்சி வேகம் குறைந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட 15 பெருநகரங்களை தவிர்த்து மற்ற நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் பரஸ்பர நிதி திட்டங்கள் குறித்தும், அவற்றில் முதலீடு செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி பரஸ்பர நிதி நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் பலனாக பரஸ்பர நிதி துறையில் சிறிய, நடுத்தர நகரங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதிய முதலீட்டாளர்கள்

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்