நாட்டுப்பற்று வளர வேண்டும்.. நல்லதே நடக்க வேண்டும்..- தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா
விகாரி என்பது இந்த ஆண்டின் திரு நாமம். அது தவசிரேஷ்டர்கள் வைத்த திருநாமம். இந்த ஆண்டில் பன்னிரெண்டு மாதங்களில் தண்ணீர் எப்போதும் கிடைத்ததை விட சற்று குறைவாக கிடைக்கும். தண்ணீர் விஷயத்தில் மக்கள் சிக்கனமாய் இருக்க வேண்டும். பல வெளிநாடுகளின் செயல்பாடுகளால் நம் நாட்டிற்கு அச்சம் ஏற்படலாம். பயப்பட வேண்டிய அவசியம் தோன்றலாம். விவசாயம் நடுத்தர நிலையிலேயே நடைபெறும். இதனால் மழை குறையும் என்று தெரிகிறது.
ஆத்ம சாதகர்களின் தர்ம சாதனையினாலும், குருமார்களின் குரு யோகத்தின் மூலமும் மக்கள் இயற்கையை வணங்கி பரம்பொருளிடம் - கடவுளிடம் சரணடைய வேண்டும். சத்தியம், தர்மம், நியாயம் மூன்றும் சீர்பட மக்கள் வாழ்க்கையை நடத்தினால் துன்பியல் நிகழ்வுகள் வராமல் தடுக்கலாம். பெரியோர்கள் பெரியோர்களாக இருக்க வேண்டும். இளைஞர்கள் ஒழுக்கத்தை முறையாக காப்பாற்ற வேண்டும். அப்பா-அம்மாவை மதித்து வணங்க வேண்டும். அவர்களின் முதிய காலத்தில் அவர் களுக்கு உணவு கொடுத்து அன்பாக பேசி, பழகி, ஆத்ம திருப்தியோடு வணங்க வேண்டும். அவர்கள் இயற்கை எய்தி விட்டால், மகா மரியாதையுடனும், கவுரவத்துடனும் அவர்களை இயற்கையிடம் ஒப்படைக்க வேண்டும். அதில் தான்தோன்றித்தனம் கூடாது.
வெளிப்படையாகச் சொல்லப் போனால், நம் நாட்டு மக்களுக்கு நாட்டுப் பற்று அதிகரிக்க வேண்டும். சிற்றின்பம், பதவி ஆசை, பண வெறி மூன்றிலிருந்தும் மக்கள் விலகி, பக்தி பெருகி, கடவுளே கதி என்று வாழ்ந்தால் இயற்கையின் ஆபத்துகளிடமிருந் தும் சகல துக் கங்களில் இருந்தும் விலகி வாழ்வாங்கு வாழலாம்.
மனிதனின் பேரறிவு, நுண்ணறிவு வளர வேண்டும். இந்த நாட்டில் தத்துவ ஞானிகள் சற்று குறைந்து விட்டனர். நல்ல தலைவர்கள் குறைந்து விட்டனர். ராஜதந்திரிகள் குறைந்து விட்டனர். ஒரு நாடு வளர்வதற்கு, செழிப்பாக வாழ்வதற்கு இவை தேவை. நம் நாட்டில் அவைகள் பெருக வேண்டும்.
இந்த உலகில் பாரதத்தை விட சிறந்த நாடு கிடையாது. நம் நாட்டில்தான் ஆகாயம் பரிசுத்தமாக உள்ளது. வெட்டவெளி சிறப்பாக உள்ளது. பெரும் துன்பங்களை வெல்கின்ற ஆற்றல் படைத்த ஞானிகள் இங்குதான் உள்ளனர். நைமிசாரண்யம் போன்ற புனிதமான இடங்கள் இங்குள்ளன. அன்பிற்கும் அருளுக்கும், ஆசிக்கும், பாரத நாட்டைக் காட்டிலும் புனிதமான இடம் வேறு எங்கும் இல்லை. இது, தவத்திற்கு ஏற்ற பூமி. பிரம்ம ஞானத்திற்கு ஏற்ற பூமி. இந்த விகாரி ஆண்டில் எல்லா உயிர்களும் இன்புற்று ஆனந்தமயமாக வாழ எல்லாம் வல்ல பரம்பொருளை பிரார்த்தித்து, ஓங்கார ஆசிரமம் வாழ்த்துகிறது!