உரிமை கோரப்படாமல் இருக்கும் வங்கி டெபாசிட் தொகை 27% உயர்வு
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
வங்கிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருக்கும் டெபாசிட் தொகை 27 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி உரிமை கோரப்படாத வங்கி டெபாசிட் ரூ.8,928 கோடியாக இருந்தது. 2017 இறுதியில் அது ரூ.11,494 கோடியாக உயர்ந்தது. 2018-ஆம் ஆண்டில் ரூ.14,578 கோடியாக அதிகரித்து இருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 27 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி பாரத ஸ்டேட் வங்கியில் யாரும் உரிமை கோராத நிலையில் இருக்கும் டெபாசிட் தொகை ரூ.2,156.33 கோடியாக உள்ளது.
சட்டப்படியான நடவடிக்கைகளால், கடந்த 5 நிதி ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடனில் ரூ.2,06,586 கோடி மீட்கப்பட்டு இருக்கிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் எழுத்து மூலமான பதில் ஒன்றில் இந்த புள்ளிவிவரங்களை தந்துள்ளார்.