திருட்டுகளில் முதல் இடத்தில் திருப்பூர்; கடைசி இடத்தில் நீலகிரி மாவட்டம்

அதிகரிக்கும் வருமான சமத்துவமின்மை, வேலையின்மை மற்றும் நிறைவேறாத ஆசைகளின் விளைவாக குற்றங்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. ஆனால் இதர மாநிலங்களை விட தமிழகத்தின் நிலை மேம்பட்டுள்ளது.

Update: 2019-11-11 04:47 GMT
2017-ல் திருப்பூர் நகரில் தமிழகத்திலேயே மிக அதிகமாக, 402.9 குற்றங்கள் (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 402 குற்றச்சம்பவங்கள்) நிகழ்ந்தன. மதுரை 2-வது இடத்திலும் (344.1), காஞ்சீபுரம் (307.5) 3-வது இடத்திலும் உள்ளன.

மாநிலத்தின் சராசரி குற்ற விகிதமான 225.9-ஐ விட 18 மாவட்டங்களின் குற்ற விகிதம் அதிகமாக உள்ளதாக, தமிழ்நாடு மாநில குற்ற ஆவண காப்பகத்தின் (எஸ்.சி.ஆர்.பி) தரவுகள் காட்டுகின்றன. மிக குறைவான விகிதங்கள் தர்மபுரி (155.1), திருவண்ணாமலை (144.4) மற்றும் நீலகிரி (124.2) மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. 200.2 அளவு குற்ற விகிதத்தை கொண்டு சென்னை, 13-வது இடத்தில் உள்ளது. இது மாநில சராசரியை விட குறைவானது தான்.

ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு, அதிக எண்ணிக்கையில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுவது போலீசார் துடிப்பாக செயல்படுவதையும், மக்களிடம் சட்டம் பற்றிய விழிப்புணர்வு அதிகமாக உள்ளதையும், அந்த மாநிலங்களில் களத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் புகார்தாரர்களை திருப்பி அனுப்பாமல், அனைத்து புகார்களையும் பதிவு செய்கின்றனர் என்பதையும் காட்டுகிறது என்று மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் பதிவாகும் குற்றங்களின் விகிதம் அதிகமாகிறது.

இது மாவட்டத்திற்கு மாவட்டம், அங்கு உள்ள போலீசாரை பொறுத்து வேறுபடுகிறது. பல மாவட்டங்களில் குற்ற சம்பவங்கள் உண்மையிலேயே குறைவாக உள்ளன.

காரணங்கள்
மாவட்டங்களின் சமூக பொருளாதார கட்டமைப்பு மாறி வருவதற்கு, புதிய திட்டங்களுக்காக வெளியாட்களின் வருகை அதிகரிப்பு, முதியவர்களை ஊரில் விட்டு விட்டு, வேலை தேடி வெளியூர் செல்லும் இளைஞர்களின் வெளியேற்றம், அதிகரிக்கும் நகரமயமாக்கல், தொழில் முனையங்கள் மற்றும் சுற்றுலாதலங்களில் புதிய உணவு விடுதிகள் மற்றும் மதுபான விடுதிகள் கட்டப்படுதல், இவற்றால் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள், வேலையின்மை, விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை அதிகரிப்பு ஆகியவைதான் காரணம். இதனால் தனியாக செயல்படும், உள்ளூரை சேர்ந்த தொடர் குற்றவாளிகளுக்கும் ஒழுங்கு செய்யப்பட்ட குழுக்களுக்கும் (ராஜஸ்தான் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து வரும் தொழில்முறை கும்பல்கள் உள்பட) சுலபமான வேட்டை காடுகளாக மாறி வருகின்றன.

2017-ல் தமிழகத்தில் 15,422 திருட்டு வழக்குகள் (இ.பி.கோ 379 பிரிவின் கீழ்) பதிவாகியுள்ளதாக என்.சி.ஆர்.பி (தேசிய குற்ற ஆவண காப்பகம்) கூறுகிறது. தமிழகத்தின் குற்ற விகிதம் 22.1 ஆக (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு) உள்ளது. அகில இந்திய அளவில் இது 5.89 லட்சமாக, குற்ற விகிதம் 45.7 ஆக உள்ளது.

தமிழகத்தில் வீடு புகுந்து திருடும் வழக்குகளின் எண்ணிக்கை 4,751 ஆக, மொத்த திருட்டு வழக்குகளில் 3-ல் ஒரு பங்காக உள்ளது. இவ்வகை குற்றங்களின் விகிதம் 6.8 ஆக உள்ளது. தேசிய அளவில் இது 1.10 லட்சமாகவும், குற்ற விகிதம் 8.6 ஆகவும் உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 5,880 ஆட்டோமொபைல் மற்றும் மோட்டார் வாகன திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இவ்வகை குற்றங்களின் விகிதம் 8.4 ஆக, தேசிய அளவான 17.5-ஐ விட பாதிக்கும் குறைவாக உள்ளது. அகில இந்திய அளவில் இந்த பிரிவில் 2.25 வழக்குகள் பதிவாகியுள்ளன.

‘கடந்த 2 வருடங்களாக திருட்டுகள் மற்றும் வீடு புகுந்து திருடும் வழக்குகள் பற்றிய புள்ளி விவரங்கள், இவ்வகை குற்றங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய நிலையாக இருப்பதை காட்டுகிறது. திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளை புலனாய்வு செய்து, மீட்பதில் பிற மாநிலங்களை விட நாம் முன்ணணியில் இருக்கிறோம்.

நம்முடைய அமைப்பு வெளிப்படையானது. மிக நவீன தொழில்நுட்பம், மக்களிடம் அதிக அளவில் உள்ள விழிப்புணர்வு ஆகியவற்றின் விளைவாக அதிக அளவில் வழக்குகள் பதிவாகின்றன. விதி விலக்கில்லாமல், அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகின்றன’ என்கிறார் தமிழ்நாடு குற்ற ஆவண காப்பகத்தின் (எஸ்.சி.ஆர்.பி) ஏ.டி.ஜி.பி. வினித் தேவ் வான்கடே.

‘குற்ற தடுப்பு நடவடிக்கைகளை விரிவாக செயல்படுத்தி வருகிறோம். கூடுதலான இரவு ரோந்து பணிகள், நடை காவலர்கள் மற்றும் ரோந்து குழுக்களின் செயல்பாடுகள் அதிகரிப்பு, குற்றவாளிகள் மீது முன் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள குற்றவாளிகள் மீதான கண்காணிப்புகள் போன்றவை இவற்றில் அடங்கும். குற்றத்தடுப்பு நடவடிக்கையில், எஸ்.எல்.எல். (சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள்) சட்டப்பிரிவுகளின் கீழ் இவர்களில் பலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது’ என்று தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவு ஏ.டி.ஜி.பி. கே.ஜெயந்த் முரளி கூறுகிறார்.

செயல்பாட்டு முறை
திருட்டு மற்றும் கொள்ளைகளில், உள்ளூரை சேர்ந்த, அடிக்கடி குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் ஒழுங்கு செய்யப்பட்ட குழுக்கள் ஈடுபடுகின்றனர். இதில் பல குற்றங்களை அண்டை மாநிலத்தை சேர்ந்த தொழில்முறை குழுக்கள் மட்டுமல்லாமல், பீகார், ராஜஸ்தானை சேர்ந்த குழுக்களும் செய்கின்றனர். போலீசாருக்கு சவாலாக இருக்கும் வகையில் இவர்கள் பல மிக புதுமையான செயல்பாட்டு முறைகளை கையாள்கின்றனர்.

கதவு உடைப்பு மற்றும் உள்நபர்கள் தொடர்புகள் எதுவும் இல்லாமல், சென்னையில் நடந்த தொடர் நகைக்கடை கொள்ளைகளை ஏ.டி.ஜி.பி. அக்தர் நினைவு கூர்கிறார்.

இவற்றை புலனாய்வு செய்த போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு ஒரு வழக்கமான கைது நடவடிக்கையின் போது, சில துப்புகள் கிடைத்த பின், வடக்கு பீகாரில் இருந்து வந்திருந்த குழுவினரை பிடித்தனர்.

அவர்களின் செயல்பாட்டு முறை; ரெயில் மூலம் சென்னைக்கு வந்து, குறிவைக்கப்படும் நகைக்கடைகளின் முன்பு உள்ள நடைபாதைகளில், வீடு இல்லாதவர்கள் போல் நடித்து தூங்குவது ஆகும்.

நடு இரவில் அந்த குழுவை சேர்ந்த நபர் ஒருவர் (கோலி என்ற பட்டப்பெயர் கொண்டவர்), நகைக்கடையின் ஷட்டர்களுக்கிடையே, பூட்டுகளை உடைக்காமல், நுழைந்து கடையில் உள்ள நகைகள் அனைத்தையும், சத்தமில்லாமல் மூட்டை கட்டுவார். இதர குழுவினர் கடைக்கு வெளியே படுக்கைகளை விரிப்பது போல் நடித்து, எதுவுமே நடக்காதது போல் காவலாளிகளை ஏமாற்றுவர். சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை கைது செய்த பின், மொத்த குழுவினரும் அம்பலப்பட்டு 10, 15 உறுப்பினர்கள் பிடிபட்டனர்.

திருச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மற்றொரு குழுவினர், சாலையில் கிடக்கும் பணத்தை சுட்டிக்காட்டி, பயணிகளின் கவனத்தை திசை திருப்புவதில் கை தேர்ந்தவர்கள். சாலையில் கிடக்கும் பணத்தாளை எடுக்க பயணி வெளியே சென்ற உடன், அவர்களின் கைப்பைகள், மடிக்கணினிகள், செல்போன்கள் மற்றும் இதர விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு இந்த குழுவினர் சத்தமில்லாமல் சென்று விடுவார்கள்.

மோட்டார் வாகன திருட்டுகளில் ஈடுபடும் குழுக்களுக்கு சில பட்டறைகளிடம் தொடர்பு இருக்கும். அங்கு அவற்றின் வண்ணம், சேசிஸ் எண் மற்றும் வாகன எண்கள் மாற்றப்பட்டு, மாநிலத்தை விட்டு நேபாளத்திற்கு கடத்தப்படும். அங்கு அவர்களுக்கு நிரந்தரமான முகவர்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்