3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சில்லரை விலை பணவீக்கம் 5.54 சதவீதமாக உயர்ந்தது

சில்லரை விலை பணவீக்கம், நவம்பர் மாதத்தில் 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5.54 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Update: 2019-12-13 08:59 GMT
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

சி.பி.ஐ.

2012 ஜனவரி மாதத்தில் இருந்து நுகர்வோர் விலை பணவீக்கம் (சி.பி.ஐ) எனப்படும் சில்லரை விற்பனை விலை பணவீக்க புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்த பணவீக்கம் கிராமம், நகரம் மற்றும் நாடு (நகரங்களும், கிராமங்களும்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வெளியிடப்படுகிறது.

பாரத ரிசர்வ் வங்கி முன்பு மொத்த விலை பணவீக்கம் அடிப்படையில் தனது கொள்கை முடிவுகளை எடுத்து வந்தது. ஆனால் இப்போது சில்லரை விலை பணவீக்கத்தையே கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இதனால் பணவீக்கத்தை துல்லியமாக அளவிட முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதத்தில் (2019 ஏப்ரல்) சில்லரை விலை பணவீக்கம் 2.99 சதவீதமாக இருந்தது. மே மாதத்தில் இப்பணவீக்கம் 3.05 சதவீதமாக இருந்தது. ஜூன் மாதத்தில் அது 3.18 சதவீதமாக அதிகரித்தது. ஜூலையில் 3.15 சதவீதமாக சற்றே குறைந்தது. ஆகஸ்டு மாதத்தில் 3.21 சதவீதமாக உயர்ந்தது. செப்டம்பரில் 3.99 சதவீதமாக அதிகரித்தது. அக்டோபர் மாதத்தில் 4.62 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், நவம்பர் மாதத்தில் இப்பணவீக்கம் 5.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது மூன்று ஆண்டுகளில் இல்லாத ஏற்றமாக கருதப்படுகிறது. காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பே இதற்கு காரணமாகும்.

கொள்கை முடிவுகள்

வங்கிக் கடன் வட்டி விகிதங்கள் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்கம்தான் நிர்ணயிக்கிறது. இம்மாதம் 5- ந் தேதி வட்டி விகிதங்களை அறிவித்த இவ்வங்கி பணவீக்கம் பற்றிய மதிப்பீடுகளையும் வெளியிட்டது. இரண்டாவது அரையாண்டில் (2019 அக்டோபர்-2020 மார்ச்) சில்லரை விலை பணவீக்கம் 3.5-3.7 சதவீதமாக இருக்கும் என முதலில் அது தெரிவித்து இருந்தது. இது இப்போது 4.7-5.1 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அடுத்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (2020 ஏப்ரல்-செப்டம்பர்) 3.8-4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்