சல்மான்கானிடம் ஆதரவு கேட்ட ராஜமவுலி

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான்கானை எஸ்.எஸ்.ராஜமவுலி சந்தித்துள்ளார். அவரிடம், ‘பாகுபலியைப் போன்றே பிரமாண்டமாக உருவாகியுள்ள, ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு, உங்களுடைய பேராதரவு வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Update: 2021-11-30 15:25 GMT
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்த எஸ்.எஸ்.ராஜமவுலி, ஈ ஒன்றை வைத்து எடுத்த சினிமாவின் மூலமாக, இந்தியத் திரையுலகம் அனைத்தையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தார். இதையடுத்து அவர் இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும், மிகப்பெரிய வெற்றிபெற்று, இந்தியாவின் முதன்மை இயக்குனராக அவரை உயர்த்தியது.

இதையடுத்து மீண்டும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கி முடித்திருக்கிறார், ராஜமவுலி. ‘ஆர்ஆர்ஆர்’ என்று பெயரிடப்பட்ட அந்தப் படமும் ‘பான்- இந்தியா’ படமாக வெளியாகிறது. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண், பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கன், பாலிவுட் நடிகை அலியா பட் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இந்தப் படமும் மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகியிருக்கிறது.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் பின்னணியை திரைக்கதையாக வைத்து, இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் பழங்குடி இன மக்களின் உரிமைக்காக, அப்போதைய ஆட்சியாளர்களை எதிர்த்து போரிட்ட அல்லரி சீதாராம ராஜூ கதாபாத்திரத்தில் ராம்சரணும், கொமரம் பீம் என்ற போராளியின் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வருகிற ஜனவரி மாதம் 7-ந் தேதி, இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிடப்படுகிறது. இந்தப் படத்திற்காக ஆதரவு திரட்டும் வேலைகளில் இப்போதே, ராஜமவுலி ஈடுபடத் தொடங்கிவிட்டார். இதன் ஒரு பகுதியாக அவர், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான்கானை சந்தித்துள்ளார். அவரிடம், ‘பாகுபலியைப் போன்றே பிரமாண்டமாக உருவாகியுள்ள, ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு, உங்களுடைய பேராதரவு வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்