10 கோடி முட்டைகள் தேக்கம்

நாமக்கல் மண்டலத்தில் சுமார் 10 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் சங்க நிர்வாகி கூறினார்.;

Update:2023-01-22 00:15 IST

4½ கோடி முட்டைகள் உற்பத்தி

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி சுமார் 4½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை வெளிநாடுகள், வெளிமாநிலம் மற்றும் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு வாரத்தில் 3 நாட்கள் விலை நிர்ணயம் செய்கிறது. பண்டிகை காலங்கள், சீதோஷ்ணநிலை மாறுபாடு மற்றும் பிறமண்டல விலை போன்றவற்றை கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை 565 காசுகளாக நீடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 545 காசுகளாக குறைந்து உள்ளது.

10 கோடி முட்டைகள் இருப்பு

இந்த விலை குறைப்பு குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்ததாலும், வடமாநிலங்களுக்கு தினசரி அனுப்பி வைக்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததாலும் நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை புதிய உச்சத்தை தொட்டது.

தற்போது ஐதராபாத் மண்டலத்தில் முட்டை விலை குறைந்து இருப்பதால், வடமாநிலங்களுக்கு முட்டை அனுப்புவது 4 நாட்களாக தடைப்பட்டு உள்ளது. இதேபோல் பல்வேறு காரணங்களால் 2 நாட்கள் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 9 கோடி முட்டைகள் இருப்பு உள்ளது. மொத்தமாக சுமார் 10 கோடி முட்டைகள் இருப்பு (தேக்கம்) உள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கொள்முதல் விலையை 545 காசுகள் என நிர்ணயம் செய்தாலும், பண்ணையாளர்களிடம் வியாபாரிகள் 65 காசுகள் குறைத்து 480 காசுகளுக்கு மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள். இதுவே விலை குறைப்புக்கு காரணம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல் மண்டலத்தில் கோடிக்கணக்கில் முட்டைகள் தேக்கம் அடைந்து இருப்பதால் கொள்முதல் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தைப்பூசம் நெருங்கி வருவதால் தமிழகத்திலும் முட்டை விற்பனை சரிவடைந்து இருப்பதே விலை குறைப்புக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்