சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வை 1,311 பேர் எழுதினர்

வேலூர் மாவட்டத்தில் 10 மையங்களில் நடந்த சிவிஸ் சர்வீஸ் முதல்நிலை தேர்வை 1,311 பேர் எழுதினார்கள்.

Update: 2022-06-05 17:15 GMT

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 10 மையங்களில் நடந்த சிவிஸ் சர்வீஸ் முதல்நிலை தேர்வை 1,311 பேர் எழுதினார்கள். தேர்வு மையங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் மதிவாணன், கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு

இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி உள்ளிட்ட இந்திய குடிமை பணிகளுக்கான முதல்நிலை தேர்வு (சிவில் சர்வீஸ்) நாடு முழுவதும்  நடைபெற்றது. தமிழகத்தில் வேலூர், சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் இந்த தேர்வு நடந்தது.

சிவில் சர்வீஸ் தேர்வை எழுத வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2,588 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, தந்தை பெரியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, டி.கே.எம். மகளிர் கல்லூரி உள்பட 10 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

முதல்நிலை தேர்வின் முதல்தாள் காலை 9.30 மணிக்கு தொடங்கி 11.30 மணிவரை நடந்தது. காலை 8 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், கைக்கெடிகாரம் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

1,311 பேர் தேர்வு எழுதினர்

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வின் முதல்தாளை 1,311 பேர் மட்டுமே எழுதினார்கள். 1,277 பேர் எழுதவில்லை. 2-ம் தாள் தேர்வு பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடந்தது. இந்த தேர்வை 1,299 பேர் எழுதினர். 1,289 பேர் பங்கேற்கவில்லை.

வேலூர் டி.கே.எம். மகளிர் கல்லூரி உள்பட பல்வேறு மையத்தில் நடந்த தேர்வை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் மதிவாணன் மற்றும் வேலூர் மாவட்ட குடிமைப்பணி தேர்வு ஒருங்கிணைப்பாளரும், கலெக்டருமான குமாரவேல்பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் செல்போன் ஜாமர்கருவி பொருத்தப்பட்டிருந்தது. மேலும் தேர்வு மையங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்