திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 20 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ 20 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-06-12 03:19 GMT


திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

அவ்வாறு கடத்தி வரும் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று வந்தது.

இந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவர் எடுத்து வந்த வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்து வைக்கப்பட்ட ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

20 துண்டுகளாக கொண்டுவந்த 385 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்