துப்புரவு தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த துப்புரவு தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை போக்சோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2023-10-18 18:45 GMT


12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த துப்புரவு தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை போக்சோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

துப்புரவு தொழிலாளி

விழுப்புரம் மாவட்டம் சிந்தாமணி தெருவை சேர்ந்த முருகன் என்பவரது மகன் கலியபெருமாள் என்ற அரவிந்த்(வயது 22). இவர், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் தங்கியிருந்து பேரூராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது வீட்டின் அருகே தாய், தந்தை இல்லாத 12 வயது சிறுமி தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த 12 வயது சிறுமியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி அரவிந்த் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார்.

பாலியல் பலாத்காரம்

ஆனால் சிறுமியை வீட்டில் இறக்கி விடாமல் அருகில் உள்ள மயான பகுதிக்கு கொண்டு சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது உறவினரிடம் தெரிவித்ததன் பேரில், அவர்கள் நாகை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரவிந்தை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிவண்ணன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

20 ஆண்டுகள் சிறை

அவர் தனது தீர்ப்பில், 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த துப்புரவு தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் ேமலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் தாக்குதல் செய்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், கடத்தல் குற்றத்துக்காக 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 1,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் வழங்கினார்.

இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கும்படி அவர் தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு அவர் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட அரவிந்த்தை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்