போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீபா புகார் மனு டி.டி.வி.தினகரன் மீது குற்றச்சாட்டு

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீபா புகார் மனு ஒன்றை கொடுத்தார். இந்த புகார் மனுவில் டி.டி.வி.தினகரன் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்

Update: 2017-06-13 21:30 GMT
சென்னை,

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டிற்குள் அவரது அண்ணன் மகள் தீபா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் சென்றார். அவருடன் அவருடைய ஆதரவாளர்களும் சென்றனர். அவரது கணவர் மாதவனும் உடன் சென்றிருந்தார். அப்போது ஜெயலலிதா வீட்டில் தீபாவின் தம்பி தீபக்கும் இருந்தார்.

அங்கு ஏற்பட்ட மோதலில் தீபாவும், அவரது கணவர் மாதவனும் மற்றும் ஆதரவாளர்களும் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக புகார் கூறப்பட்டது. தீபாவும் மாதவனும் ஜெயலலிதா வீட்டு முன்பு நீண்ட நேரம் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். போலீசார் சமாதானம் கூறியதின் பேரில் பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

உயிருக்கு ஆபத்து

இந்த சம்பவம் தொடர்பாக மாதவன் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மாலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், தீபாவுக்கும், தனக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும், ஜெயலலிதா வீட்டில் தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், நேற்று காலையில் தீபாவின் கையெழுத்துடன் அவர் சார்பில் புகார் மனு ஒன்று, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. தீபா நேரிடையாக வரவில்லை. அவர் சார்பில் செய்தி தொடர்பாளர் பசும்பொன்பாண்டியன் என்பவர் வந்து புகார் மனுவை கொடுத்துவிட்டு சென்றார்.

தினகரன் மீது குற்றச்சாட்டு

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று எனது சகோதரர் தீபக் அழைத்ததின் பேரில், நான் எனது அத்தை ஜெயலலிதா வீட்டிற்கு சென்றேன். என்னுடன் எனது ஆதரவாளர்கள் ராஜா, ராமச்சந்திரன், கார்த்திக், பாலாஜி உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர். என்னுடன் பத்திரிகை நிருபர்களும் வந்திருந்தார்கள்.

டி.டி.வி.தினகரனின் தூண்டுதலின் பேரில், அவரது ஆதரவாளர்கள் எங்களை அடித்து வெளியே தள்ளினார்கள். எங்களுடன் வந்த பத்திரிகை நிருபர்களும் தாக்கப்பட்டனர். கோதண்டராமன் என்பவரும் அவர்களுடன் இருந்த மேலும் 6 நபர்களும் எங்களை தாக்கினார்கள். என்னை வரவழைத்த தீபக் துணையோடு டி.டி.வி. தினகரனின் தூண்டுதலின்பேரில் எங்கள் மீது தாக்குதல் நடந்தது. எங்களை தாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் செய்திகள்