நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்டபத்தை அக். 1ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார்

நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்டபத்தை அவரது பிறந்த நாளான அக். 1 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார்.

Update: 2017-09-25 10:09 GMT
சென்னை,

தமிழ் திரையுலகில் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ‘நடிகர் திலகம்’ என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர்.

பல உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரரான சிவாஜி கணேசன் கடந்த 2001–ம் ஆண்டு ஜூலை 21–ந் தேதி மரணம் அடைந்தார். அதன்பின்னர் சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டுவதற்கு அரசிடம் இடம் கேட்கப்பட்டது. அப்போது 2002–ம் ஆண்டு முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே 28 ஆயிரத்து 300 சதுரடி இடம் ஒதுக்கி கொடுத்தார்.

பின்னர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. அதன்பின்னர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி அப்படியே நின்று போனது.  இந்த நிலையில் கடந்த 2015–ம் ஆண்டு ஆகஸ்டு 26–ந் தேதி சட்டசபையில் 110–விதியின் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது, ‘சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வழங்கப்பட்ட இடத்தில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும்’ என்றார்.

அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கியது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்து விட்டன. இதை தொடர்ந்து சிவாஜி கணேசன் பிறந்தநாளான  வருகிற அக்டடோபர் 1 ந்தேதி   முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணிமண்டபத்தை திறந்து வைப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மணி மண்டபத்தில்  சிவாஜியின் வாழக்கை வரலாறு , புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி நடைபெறுகிறது.நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது

மேலும் செய்திகள்