தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசுப்பேருந்து சேவை இயக்கம்
துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று அரசுப்பேருந்து சேவை தொடங்கியுள்ளது #Tuticorin #SterliteIssue
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப்பணி மற்றும் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த மூன்று மாதங்களாக போராடி வந்தனர். இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி போராட்டத்தின் 100 வது நாளில் நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வரும் 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 நாள்களுக்கு பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று தூத்துக்குடியிலிருந்து நெல்லைக்கு அரசுப்பேருந்து சேவை தொடங்கியுள்ளது.
இதனிடயே துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.