நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் இன்று தொடங்கியது

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் இன்று தொடங்கியது.

Update: 2018-06-27 04:52 GMT
நெல்லை,

நெல்லையில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனித்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் வீதிஉலா மற்றும் பக்தி கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 9-வது நாள் விழாவையொட்டி இன்று தேரோட்டம் தொடங்கியது.

முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் தேர்களும், சுவாமி தேரை தொடர்ந்து அம்பாள் தேரும், இறுதியாக சண்டிகேசுவரர் தேரும் இழுக்கப்படுகின்றன.  இந்த 5 தேர்களுக்கும் கடந்த சில நாட்களாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.  இதையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேந்தர்குமார் ரத்தோட் உத்தரவுப்படி துணை கமிஷனர்கள் சுகுணா சிங் (சட்டம்- ஒழுங்கு), பெரோஸ்கான் அப்துல்லா (குற்றம்-போக்குவரத்து) ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

இன்று நடைபெறும் தேரோட்டத்தின் போது பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் போலீஸ் உதவி கமிஷனர்கள், துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் நெல்லை டவுனில் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தேரோட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தேரோட்டத்தின் போது திருடர்கள் கைவரிசை காட்டுவதை தடுக்கும் வகையில் போலீசார் நவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்க உள்ளனர். இதற்காக  4 ரதவீதிகளிலும் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டு உள்ளன. மேலும் நாலாபுறமும் கண்காணித்து காட்சிகளை பதிவு செய்யும் கேமராக்கள் பொருத்தப்பட்ட வேனும் ரதவீதிகளில் தேர் ஓடும்போது சுற்றி வருகிறது.

மேலும் செய்திகள்