உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு

உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

Update: 2018-07-13 22:00 GMT
சென்னை, 

உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ அனிமேஷன் திரைப்பட டிரெய்லர் வெளியிடப்படுகிறது.

உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி இரவு 8 மணி வரை நடக்கிறது.

இதில் பல்வேறு முக்கிய தலைவர்கள், எம்.ஜி.ஆரோடு சினிமாவில் தொடர்புடைய கலைஞர்கள், திரைப்பட நடிகைகள் என பலர் பங்கு பெற இருக்கிறார்கள்.

காலை 9 மணி முதல் 11 மணி வரை வரவேற்புரை, குழு உறுப்பினர்கள் குத்து விளக்கேற்றுதல், எம்.ஜி.ஆர். புகைப்பட காட்சிகள் எல்.இ.டி. திரையில் திரையிடப்படுதல், கொடி ஏற்றுதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

அதனைத்தொடர்ந்து காலை 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார்.

இதில் எஸ்.கே.முருகன் எழுதிய பெருநகர சென்னை மாநகராட்சி ‘முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் 5 ஆண்டுகால பணிகள்’ பற்றிய ஆய்வு நூலையும், சைதை துரைசாமி தயாரித்த ‘வேர்களுக்கு வெளிச்சம்’ என்ற நூலையும் கவர்னர் வெளியிடுகிறார். பின்னர், எம்.ஜி.ஆர். நினைவுத்தூணை திறந்து வைத்து, விழா பேருரை ஆற்றுகிறார்.

இந்த ஒரு மணி நேர நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கு பெற இருக்கிறார்கள். அதில் 15 பேர் தமிழக கவர்னரால் கவுரவிக்கப்பட உள்ளனர். மேலும் உலக எம்.ஜி.ஆர். பிரதிநிதிகள், எம்.ஜி.ஆரின் ரத்த உறவுகள், அவரோடு பணிபுரிந்தவர்கள், எம்.ஜி.ஆரோடு தொடக்கம் முதல் இறுதிவரை இருந்தவர்கள் என அனைவரும் கவுரவிக்கப்பட இருக்கிறார்கள்.

பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை தப்பாட்டக்குழுவினர் மற்றும் இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை மதிய உணவு வழங்கப்படும்.

அதையடுத்து, பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 7 மணி வரை ஞானசம்பந்தம் குழுவினரின் பட்டிமன்றம், மலேசியா ஹரியின் பாட்டு நிகழ்ச்சி, திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் குழுவினரின் வீர விளையாட்டுகள், ஸ்ரீதர் மற்றும் குழுவினரின் நடன நிகழ்ச்சி, கவிஞர்கள் முத்துலிங்கம், புலமை பித்தன், பூங்குழலி, அசோக் சுப்பிரமணியம், இசையமுது, ரவிபாரதி ஆகியோரின் கவியரங்கம், நாமக்கல் எம்.ஜி.ஆர். நடனம், காளஸ்வரன் கந்தசாமி, கொல்லங்குடி கருப்பாயி மற்றும் சாம்பார் ராஜன் ஆகியோரின் பல்வேறு விதமான நாட்டுப்புற ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

இரவு 7 மணி முதல் 8 மணி வரை எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு ஒரு பெரும் விருந்தாக ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்ற எம்.ஜி.ஆரின் அனிமேஷன் திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடலை திரைப்பட நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா வெளியிடுகிறார். படத்தின் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதி இருக்கிறார்.

படத்தின் பாடல் பற்றி கவிஞர் வைரமுத்துவும், இசையமைப்பாளர் இமானும் பேசுகிறார்கள். இறுதியில் நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் சைதை துரைசாமி, ஜி.விஸ்வநாதன், ஏ.சி.சண்முகம், வி.ஆர்.வெங்கடாசலம், ஐசரி கே.கணேஷ், ஆர்.எஸ்.முனிரத்தினம், மரியஸீனா, பி.பாபு மனோகரன், நாஞ்சில் எம்.வின்சென்ட், லதா, முருகபத்மநாபன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்