‘நரசிம்மராவுடன் தம்பிதுரை இருப்பார்’ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது.

Update: 2018-08-05 17:22 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது. விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு நாடாளுமன்ற துணை சபாநாயகரை புகழ்ந்து பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:–

இன்னும் சிறிது நேரத்தில் தம்பிதுரை இங்கு வந்துவிடுவார். அவர் மதிய சாப்பாட்டை வேடசந்தூரில் சாப்பிடுவார். சாயங்கால சாப்பாட்டுக்கு புதுக்கோட்டைக்கு சென்று விடுவார். அதன்பிறகு இன்னொரு தொகுதியில் போய் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுவிட்டு டெல்லிக்கு போய் நரசிம்மராவுடன் உட்கார்ந்து இருப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

நரசிம்மராவ் முன்னாள் பிரதமர் ஆவார். அவர் இறந்து 14 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் நரசிம்மராவ் உயிருடன் இருப்பதுபோல அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் விழாவில் பங்கேற்றவர்கள் மத்தியில் பரபரப்பும், சிரிப்பலையும் எழுந்தது.

ஏற்கனவே சமீபத்தில் வேடசந்தூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை டி.டி.வி.தினகரன் எடுத்துக்கொண்டார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதேபோல், பிரதமர் நரேந்திரமோடி என்பதற்கு பதிலாக மன்மோகன் சிங் என்றும், பாரத ரத்னா எம்.ஜி.ஆர். என்பதற்கு பதிலாக பாரத பிரதமர் எம்.ஜி.ஆர். என்றும் பேசியது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்